Published on 29 Apr 2026
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள்