Published on 29 Apr 2026
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
ஊக்கம் உடைமையே ‘உடையவர்’ என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள்
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்