Neer Indru Amayathu Ulaku

Published on 23 May 2026


நீரின்றி அமையாது உலகு

  • இயற்கை என்பது உயிர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. உயர்ந்தோங்கிய மலைகள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், நீர்நிலைகள், வயல்வெளிகள், பசுமையான தோப்புகள் என இயற்கையின் கொடைகள் கணக்கிலடங்காதவை . அவற்றை உரிய வகையில் பயன்படுத்தியும் பாதுகாத்தும் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பது நமது பொறுப்பு.
  • அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி – எனப் பல்வேறு பெயர்களில் நீர்நிலைகள் உள்ளன.
  • ஜூன் 5 ஆம் நாள் உலகச் சுற்றுச் சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • நீரின்று அமையாது உலகம் என்னும் தம் கருத்தைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார் திருவள்ளுவர். நீரே மனித வாழ்வின் அடிப்படை என்பதால், நம்முடைய முன்னோர்கள் பல்வேறு வகையான நீர் நிலை வடிவங்களை உருவாக்கி நீரைப் பாதுகாத்தனர்.
  • ஒவ்வோர் ஆண்டும் பெய்கின்ற மழையின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆனால், மழை வழங்கிய நீரை இத்தகைய நீர் நிலைகளே பாதுகாத்துத் தருகின்றன.
  • மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் மகிழ்ச்சியாகவாழப் பெருந்துணை புரிகின்றது.
  • மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உணவு , உடை , உறைவிடம் . இவற்றுள் முதலிரண்டும் வேளாண்மையை ஆதாரமாகக் கொண்டவை . வேளாண்மையோ நீரை அடிப்படையாகக் கொண்டது.
  • ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், மக்கள்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே நீர் நிலைகளை வடிவமைத்தனர். இதில் ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான அமைப்புகளாய்ப் பெருமளவில் பயன்பட்டன.
  • தமிழக வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்ட  கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்துள்ளது. கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60 அடியாகவும் உயரம் 15 முதல் 18 அடியாகவும் இருக்கிறது. அது வலுவான கட்டுமானத் தொழில்நுட்பத்தால் இன்றும் பயன்படுவதோடு நமது வரலாற்றுப் பெருமைக்கும் சான்றாக நிலைத்து நிற்கிறது.

                     மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
                    காடும் உடையது அரண்

            என்னும் குறட்பாவில் நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் நீருக்கே முதலிடம் தருகிறார் திருவள்ளுவர். 

  • உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ( புறம் 1 8 ) என்று சங்கப்பாடல், நீரின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறது. 

இவ்வாறு தமிழர்கள் தண்ணீரின் தேவையை நன்றாகப் புரிந்துகொண்டு, நீர் மேலாண்மையை அறிவியல் நோக்கில் கட்டமைத்தனர்.

  • ஒரு நாட்டின் வளர்ச்சிப்போக்கை நெறிப்படுத்துவதே நீர் மேலாண்மைதான்.
  • நாம் வாழும் தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. எனவே, நீர் சார்ந்த தன்னுணர்ச்சி தமிழக மக்களுக்கு மிகுதி.
  • "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே" என்பது சொல் வழக்கு.
  • தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார் பேராசிரியர் தொ .பரமசிவன்.
  • குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்; சூரியவெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிரவைத்தல் என்பதே அதன் பொருளாகும். குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று என்பது அவரது விளக்கம். 
  • குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் ஆண்டாள் . தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.
  • சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டு. நாட்டுப்புறத் தெய்வக்கோவில்களில் சாமியாடிகளுக்கு மஞ்சள் நீர் கொடுத்து அருந்தச் செய்வதும் நீராட்டுவதும் இப்போதும் நடைமுறையில் உள்ளன.
  • திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாய்க் கடலாடுதல் என்பதை மேற்கொள்ளும் வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது. இறப்புச் சடங்கிலும் உடலை நீராட்டுவதற்காக நீர்மாலை எடுத்து வருதல் என்பதும் நடைமுறையில் உள்ளது.
  • அம்மை நோய் கண்டவர்கள் குணமடைந்த பின் தலைக்குத் தண்ணீர் ஊற்றியாகிவிட்டதா? என்று கேட்பது வழக்கம்.
  • சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வாரந்தோறும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தமிழர்கள் மரபாகவே வைத்திருந்தனர். சனி நீராடு என்ப து ஔவையின் வாக்கு.
  • அதிகாலையில் வேளாண் நிலத்திற்கு உழைக்கச் செல்வோர் நீராகாரம் குடிப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு அன்பான வரவேற்பின் அடையாளமாக நீரே வழங்கப்படுகிறது.
  • இவ்வாறு தமிழக மக்களின் குடும்பம் தொடங்கி, சமூகம் வரை அனைத்திலும் தண்ணீர் முதன்மைப் பங்காற்றுகிறது .

நீர் பற்றாக்குறை 

  • உலகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் உருவாகத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் நிலத்தடி நீர்வளம் குறைந்து வருகின்றது. குறிப்பாக நமது நாட்டில் இராஜஸ்தான் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே 700 அடிவரை ஆழ்குழாய்கள் இறக்கியும் நீர் கிட்டவில்லை. சிறுநகரங்களிலும்கூட நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை மக்களுக்குப் பெரும் வாழ்வியல் நெருக்கடியாக மாறியுள்ளது.
  • உலகச் சுகாதார நிறுவனம், உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என எச்சரிக்கிறது.
  • குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் தொடரும் நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டியது உடனடித் தேவையாகும். ஆண்டுதோறும் பெய்கின்ற மழைப்பொழிவை ஆக்க நிலையில் பயன்படுத்தும் செயல்  திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும்.
  • அறிவியல் அணுகுமுறையில் மழைநீரைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்த ஊர்தோறும் ஏரிகளை உருவாக்கினர் நம் முன்னோர். அவற்றைத் தூர்வாரி முறையாகப் பராமரிப்புப் பணிகளைச் செய்தல் வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக, மழைக்காலத்திற்கு முன்பே செய்ய வேண்டும்.
  • இயற்கை நமக்குத் தரும் தண்ணீர்க்கொடையைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதே நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சிறந்த வழியாகும்.
  • உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படைத் தேவையாக உள்ள தண்ணீரைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும். நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.
  • பணம் கொடுத்தால் உணவை விலைக்கு வாங்கிவிடலாம் என்னும் மேலோட்டமான கருத்தோட்டத்தை மாற்றிக் கொள்வோம்.
  • உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அதுமட்டுமன்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,

                       துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
                       துப்பாய தூஉம் மழை

           என்று திருவள்ளுவர் கூறியுள்ளதைக் கருத்தில்கொண்டு செயல்படுவோம். 

🏷️ Tags:

No tags available


📰 Related Articles