Published on 29 Apr 2026
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகா
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும்
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
‘இதனை இப்படி யிப்படிச் செய்வோம்’ என்று சொல்லுதல் எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும்
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்
எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும்
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகவே செய்ய வேண்டும்